Thursday 3 November 2011

niraiyandri verillai


இறைவன் படைப்பில்
இரண்டும் உண்டு.
இரவு - பகல்
இருள்- வெளிச்சம்
இன்பம் - துன்பம்
இப்படி...

என் வாழ்க்கையும்
இதற்கு விதிவிலக்கல்ல...

நான் மகிழந்ததை...
உள்ளம் நெகிழ்ந்ததை..
நனவோடை நினைவுகள்
என்று எழுதினேன்.
என் மறு பக்கத்தை
மனம் திறக்கும் நூல் இது.

உன் வலியை
வார்த்தைகளாக்குவாய்
அதை நாங்கள்
வாசிக்க வேண்டுமா?
என்ற கேள்வி எழலாம்.

வார்த்தைகளாக
இந்நூலில் கிடப்பது
வலிகள் மட்டுமல்ல...
படைத்தவனுக்கும்
படைப்பாளிக்கும்
நடக்கும் உரிமைப் போராட்டம்.

இந்த நூலின் வரிகளை
வாசிக்கும்போது அதில்
உங்களை நீங்கள் பார்க்கலாம்...
இறுதியில் உங்கள்
இதயம் வருடப்படுவதை உணரலாம்.

வாசியுங்கள்...
நேசிப்பீர்கள்
என்னையும்
என் எழுத்தையும்.

****


தாயின் தாலாட்டைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதந்திருக்கும்.
இமைகள் இரண்டையும்
நித்திரை தழுவியிருக்கும் நிச்சயம்.

உறங்கவைத்த தாலாட்டு
உள்ளம் குளிர்வித்த மகிழ்ச்சி
நினைவுகளில் ஏனோ
நிலை கொள்ளவில்லை.
சிறுவயதில் கேட்டதால்
சிந்தையில் படியவில்லை.

ஓதற்கரியவனே...!
உலகம்இதுவென
உணரும் வயதினில்
ஊருக்கு வெளியே என்னை
தனியே விட்டுவிட்டாய்...
பாலுக்கு ஏங்கும் குழந்தையாய்...
கொழுவுக்கு ஏங்கும் கொடியாய்...
அன்புக்கு ஏங்கும் அனாதையாய்...

புத்தகம் சுமக்கும் வயதில்
புத்தகம் சுமந்தேன்- கூடவே
சோகத்தையும் அல்லவா
சுமக்கவிட்டாய்...

அன்பைச் சுவைத்து
ஆதரவைப் பெறும் வயதில்
அன்புக்கு ஏங்கித் தவிக்கும்
அவலம் கொடுத்தாய்.

அவலம் மட்டுமே என்
அடிமனதில் ஆழப் பதிந்தது.
அன்றாட வாழ்க்கையாயும்
ஆகிப் போனது ...

மறதியைக் கொடுத்திருந்தால்
மனதுக்கு நிம்மதி.
எல்லையற்ற நினைவாற்றலை
எனக்குக் கொடுத்தாய்.
எல்லாரும் வியக்கிறார்கள்.
என்னால் மட்டும் அதில்
லயிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி மட்டுமே என்
மனதில் நின்றிருந்தால்
மகிழ்ந்திருப்பேன் நானும்...
வலியும் சேர்ந்தே அல்லவா
வரிசை கட்டி நிற்கிறது.

வரிசையில் நிற்பவற்றை
வகைப்படுத்திப் பார்க்கிறேன்...
மகிழத் தக்கதைக் காட்டிலும்
மறக்கத் தக்கவைகளே
அதிகம் நிற்கின்றன...
ஆதிக்கம் செலுத்துகின்றன.

வசைபாடல்கள் மட்டுமே
வரிசை கட்டி நின்று
நினைவுகளில் எப்போதும்
நிலை பெற்றிருக்கின்றன.

வலியின் நடுவில்
வருகிறது ஒரு மகிழ்ச்சி
குளிர்விக்க வந்த
கோடை மழை போல...
வானத்து மின்னல் போல
வந்த வேகத்தில் மறைகிறது

வலி மட்டும் ஏனோ
வடுவாகத் தங்கிவிடுகிறது...
வடு மறைந்தாலும்
வாழ்நாள் முழுவதும்
வலி தொடர்கிறது.

வலியில்லாத வாழ்க்கையில்லை- அதற்கும்
வயது ஒன்று இருக்கிறதல்லவா?
உலகம் இதுவென உணரும் வயதில்
உலகமே எனக்கு வலியாகிப் போனதே...

வலியின் தவிப்பால் நான்
வழி தவறியதுண்டு...
ஆண்டு பலவாக சேர்த்த பெயரெல்லாம்
அடித்து நொறுக்கப்பட
அடித்தளம் போட்டதும் நானே ஆனேன்...

வண்டியை இயக்குவது என்னவோ
நான்தான்... ஆனால்
பின் இருக்கையில்
முதலாளியாய் அமர்ந்து
என்னை இயக்குவது நீதானே...
போகும்பாதை தவறென்றால்
யார் பொறுப்பு?

இயக்குவது நீ...
இழப்பு மட்டும் எனக்கு...
என்ன உன் திருவிளையாடல்...

தள்ளிவிடுகிறாய்...
ஆனாலும் தாங்கிப் பிடிக்கிறாய்.
அதுதான் உன்
தயாள குணம்...

விழ வைத்தாய்...
விழுந்தேன்...
விழுந்தாலும்...எழ வேண்டும் என்ற
வேகத்தைக் கொடுத்தாய்..
வீறுகொண்டுதான் எழுந்தேன்...

எழுந்தாலும் விழுந்தாலும்
என்றும் நிலைப்பது வலிதான்...
ஆனாலும்....
வலியைச் சுமந்தே
வாழப் பழகியதால்
வாழ்க்கை இதுவென்றுணர்ந்தேன்.

இறைவா...!
வலியைக் கொடுத்ததும் நீதான்...
வாழ்வைக் கொடுத்ததும் நீதான்...
வலியும் வாழ்வும் கலந்ததுதான்
வாழ்க்கை என்பதை உணரவைத்தாய்...
உள்ளம் தெளிய வைத்தாய்...

***************


கல்வி...அதுவும்
கல்லுõரிக் கல்வி...
மனதுக்கு மகிழ்ச்சியாய்...
இதயம் கவர்ந்ததாய்...
இருக்க வேண்டும்...
இதுதான் எனக்கு மகிழ்ச்சி யென்று
மனம் சொல்லியது...
மனத்துக்குப் பிடித்ததை படித்தேன்.

பிடித்ததைப் படித்தது
பிடிக்கவில்லை பலருக்கு...
கல்வியை காசாக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டும்போது...
விருப்பத்துக்கு அங்கே
வேலையன்றிப் போனது...

விலை கிடைக்க கூடியதே
வித்தகக் கல்வி என்று கருதியதால்
விரும்பிய கல்வி யை
வீண் என்று இகழ்ந்தனர்...
காசுக்கு ஆகாத கல்வி...
வாழ்வை உயர்த்தாது என்று
வசை பாடித் தீர்த்தனர்.

கற்காமல் இருந்திருந்தால் கூட
கவுரவம் கிடைத்திருக்கும்...
காசுக்காகத கல்வி என்ற
கணிப்பு அவர்களுக்கு இருந்ததால்
கவுரவம் எனக்கு மறுக்கப்பட்டது...

இதைப் படிக்கிறான்
இவன் என்று சொல்வதைக் கூட
இழிவாகக் கருதினர்...

இறைவா...!
இழிசொல் கேட்டு
இடிந்து போகாத மனம் கொடுத்தாய்...
அழிந்து போகாமல் இருக்க
ஆக்கம் கொடுத்தாய்...

அழுத்தம் தாங்கும்
கரிதான் வைரமாகும் என்பதை என்
அகத்தினுள் விதைத்தாய்...
விதைத்தது இன்று
வீண் போகவில்லை.
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது...

வலி கொடுத்த தாக்கம்
வளர்ச்சிக்கு வித்திட்டது...
வளர்ந்தேன்....
ஆலமரமாய் அல்ல...
அருகம்புல்லாய்தான்....
அருகம் புல்லானாலும்
ஆண்டவனே உன் தோள்களில்...

ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதிலேயே
அகம் மகிழ்கின்றேன்...
ஆலமரத்தின் அடியில் எதுவுமே வளராது...
ஆதலால்....
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதையே
அகம் விரும்புகிறது...

ஆண்டவனே உன்னால்
ஆசிர்வதிக்கப் பெற்றேன்.

கற்றது இன்று
கை கொடுக்கிறது...
காலத்தால் அழியா பேர் கொடுக்கிறது..

கற்றோர் அவையில்
கவுரவம் பெற்றுத் தருகிறது...
அவை கூடி போற்றுகிறது...
அகிலம் வாழ்த்துகிறது...

ஆனாலும் இறைவா....
வலி மட்டும் ஏனோ....
வழி நெடுக தொடர்கிறது...

வாழ்த்து மழையில் நனைந்தபோதும்...
வலிகள் மட்டுமே ஏனோ
வரிசை கட்டி நின்று
வாட்டம் தருகின்றன....

மறக்கத்தான் நினைக்கிறேன்...
மறக்க நினைப்பதாலேயே
மறக்காமல் நினைவுக்கு வருகிறது...
வலியின் ஆழம் வலியது அல்லவா...
அதனால்தான்....
ஊரே புகழ்கிறது....என்
ஊமை மனம் அழுகிறது...

****************

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா!
அத்தனையிலும்
அன்புக்கு நிகர் எதுவுமில்லை
என ஆக்கி வைத்தாய்.

உருவமில்லாத அந்த
உணர்வுக்குத்தான் எத்தனை சக்தி?
உயிர் ஒவ்வொன்றுக்குள்ளும்
உணர்வை வைத்தாய்...
உணர்வை வைத்தே
உயிர்களைப் படைக்கிறாய்...

அன்பின் தீண்டலில்
ஆனந்தத்தை படைத்தாய்...
தீண்டும் இன்பம் தெரிய வைத்தாய்...
அதை தீண்டாமையாய்
ஏன் ஆக்கி வைத்தாய்?

ஒரே ஒரு குளத்தில் மட்டுமே
தவமிருந்த கொக்கு நான்...
குளம் நிரம்பும்...
மீன்கள் வரும் என்று...

வற்றிய குளத்துக்கு
வராமலே போனது தண்ணீர்...
கோடை நிலமாய்
குளத்தில் வெடிப்புகள்...
குளத்தில்மட்டுமல்ல- என்
உள்ளத்திலும்தான்...
ஆனாலும்
அடி ஆழத்தின் ஈரமாய்
கசிந்துகொண்டிருக்கிறது அன்பு...

மனதுக்குள் மழை பொழியும்
என்றுதான் காத்திருந்தேன்...
மாறாக...
ரத்தத்தில் புயலடித்தது...

அணைக்க ஆளில்லாமலே
ராத்தீ பரவுகிறது...
இப்போது
மனமெல்லாம் ரணம்...

ஐம்பத்தியிரண்டு
வசந்த காலங்கள்
வந்து போயிருக்கின்றன
என் வாழ்வில்.
ஆனால்...
ஐம்பத்தியிரண்டு
கோடைகளின்
கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.

வாழ்க்கையே போதும் என்று
வலி வந்து விரட்டும்போது...
வசந்தம் ஒன்றை
வாசலில் நிறுத்துகிறாய்...
வாழ்வின் மீது
பாசத்தைக் கூட்டுகிறாய்...
ஆனால்...
வசந்தம் வாசலோடே போய்விடுகிறது...
வரும் மீண்டும் என்று
வழி பார்த்துக் காத்திருக்கிறேன்...
வலி கூடுகிறது...

வலி தெரியாமல் போய்விடக் கூடாது என்று
போதை தெளிய வைத்து
அடிக்கின்ற ரவுடிகளைப் போல...
இறைவா... நீயுமா?
வசந்தத்தை காட்டி...
வாழ்வில் ஆசையைக் கூட்டி
வலியைக் கொடுக்கிறாயே...

உனக்கும் எனக்கும் நடக்கும்
உரிமைச் சண்டையா இது?

ஆனாலும் ...
மோகத்தைக் கொல்லாமல்
மூச்சை அடைத்துவிடாமல்
முத்துக் குளிக்க கற்றுக்கொடுத்தவன் நீ...

ஒவ்வொரு முறை
மூழ்கும்போதும்
முடிந்துவிடுவோமோ என்றுதான்
மூச்சடக்குகிறேன்...
மூல முதல்வனே...
முத்துக்களோடு என்னை
முகிழ்த்தெழச் செய்கிறாய்...

****************



மானம் பெரிதென்று
மனம் சொல்கிறது....

மானம் ஊனம் ஆனாலும்
பணம் பெரிதென்று ஊர் சொல்கிறது...

பூமிப் பந்தின் சுழற்சி வேகம்
பொருளை நோக்கியே போகிறது...
ஆனாலும்...
பொருளைப் பெரிதாய்
மதிக்கவில்லை என் மனம்..
மானம் பெரிதென்று மார்தட்டியது...
மகிழ்ச்சிதான்...என்றாலும்...
அந்த மகிழ்ச்சிக்கு கொடுத்த விலை...?
மீண்டும் ஒரு வீழ்ச்சி....

வீழ்ந்தேன்...
விழப்போகிறேன் என்று தெரிந்து
விரும்பியே வீழ்ந்தேன்...

உயரத்தில் இருக்கும்வரை
மதித்துச் சென்றவர்கள்
விழுந்துகிடக்கும்போது
மிதிப்பார்கள் என்று தெரிந்தே விழுந்தேன்...
மிதிபடுவதன் வலி...
மிதிபடும்போதுதான் தெரிந்தது...

விழுந்துவிட்டானே என்று
வேதனையில் துடிப்பார்கள் என
யாரை எதிர்பார்த்தேனோ...
அவர்களும் மிதித்தபோது...
வலியின் ஆழம் அதிகமாகிப் போனது...
இதயத்தின் ஆழத்தையும் தாண்டி...
மூளையின் முடிவையும் தாண்டி...
நரம்புகளின் செல்களுக்குள்ளும்
வலி வரம்பின்றி வாட்டியது...

வலியால் துடித்தபோது...
ஆகாயத்துக்கு அப்பாலும்
கேட்கும் அளவுக்கு
உறக்கக் கத்தி...கதறித் துடிக்க
உள்ளம் தவித்தது...
உறுதி தடுத்தது...

எல்லாவற்றையும் துறந்த சன்னியாசி
இறுதியாக வைத்திருந்த ஒரே ஒரு
இடையாடையைப் போல
மீண்டும் எழுவேன் என்ற
நம்பிக்கை மட்டும்தான்
இருந்தது என்னிடம்...

விழுந்தவன் எழுவதற்குள்தான்
எத்தனை இடர்பாடுகள்...
விழுந்த இடம் மண்ணில்தான்...
ஆனாலும்...
கிடந்த இடங்கள் எங்கெங்கோ...

காட்டாற்று வெள்ளம்
கண்டபடி அடித்துச் சென்றது...
மூழ்க வைத்தது...
மூச்சுத் திணறச் செய்தது...
கல்லும்... மண்ணும்....
கருவேல மரங்களும் காயப்படுத்தின...

புரட்டிப்  புரட்டிப் போட்டு
போகும் திசையெல்லாம் இழுத்துச் சென்றது...
ஏதோ ஒரு கொம்பு கண்ணில் தெரிந்தது...
பிடித்துக் கொள்ளளாம்...
பிழைத்துக் கொள்ளலாம்
 என்று பிடித்தபோது...
பிடித்தது பாம்பென்று பிறகுதான் தெரிந்தது...


முகம் சிதைந்து...
முகவரி இழந்து...
மூச்சுத் திணறி....
முடியப் போகிறோம் என்று
முணகும் வேளையில்....

உயிர் துடிக்கும் ஓசை
உனக்குக் கேட்டிருக்குமோ...
எங்கிருந்தோ ஒரு கை வருகிறது...
தாங்கிப் பிடிக்கிறது...
அது நீயன்றி வேறில்லை
என்பதைக் கூட
உணர முடியாதவனாய் இருந்தேன்...



துயரத்தின் உயரத்தையும்
அவலத்தின் ஆழத்தையும்
அறியச் செய்தாய்...

விழுந்தவன் மீண்டும்
 எழுந்து சிறந்திட
வேகத்தைக் கொடுத்தவனே!
வலியைக் கூட
வசதியாக்கிக் கொள்ளும் வகையில்
வசப்படுத்த கற்றுக்கொடுத்தாய்...
ஆனாலும் வலி...வலிதானே...

****************


தயையான தத்துவனே

தமிழ் கொடுத்தாய்
தமிழால் உனைப்பாடும்
தகுதி கொடுத்தாய்...

பக்தி இல்லாமல்தான் பாடினேன்...
ஆனாலும்
பாடும் ஆற்றல் கொடுத்தாய்
அதன் வழி...
அன்பின் சுவையறிய ஞானமளித்தாய்...

பாலைவனப்பாதையில்
பரிதவித்தவன்
பசுஞ்சோலை கண்டதுபோல்
மனம் மகிழ்ந்தது...
உள்ளம் நெகிழந்தது...

சோலை சுகமும்
சொந்தமில்லை என்று
புழுதி புயல் வந்து தாக்கியது...
வழி தெரியாத அளவுக்கு
வந்து வந்து தாக்கியது
வலித்தது மனம்....

பாச தீபம் அணைந்துவிடுமோ என்று
பரிதவிக்கிறது மனம்... உன்
பாதம் கூட பணியாத நான்...
பாச தீபம் காக்க...அவர்களின்
பாதத்துக்கும் கீழாகப் பணிகிறேன்...

உறவு முறிந்தால்...
உ<ள்ளம் துடிக்கும்...
இன்னொரு வலி...
வலிக்கு வலிமை கூட்ட விரும்பாமல்
பணிகின்றேன் பாசத்துக்காக...
பாசத்தையும் பகட்டென்று
உதாசீனப்படுத்தி...
உதைத்தவர்கள் உண்டு...

எந்தப் பாறை
எங்கே வழுக்கும் என்ற
உண்மை தெரியாதவனாய்...
உலகம் புரியாதவனாய்....
உருள்கிறது வாழ்க்கை...
வழுக்கல் ஒவ்வொன்றிலும்
வலி வந்து கூடுகிறது...

எண்ணத்தில் இருப்பதினும்
எதார்த்தமே நிஜமென்பதை
ஏனோ எனக்கு உணர்த்த தவறிவிட்டாய்...
எதார்த்தம் உணர்ந்திருந்தால்
என் வலி கூடியிருக்காது...

நட்பு மலர் முகிழ்க்குமென்று
நாளும் எதிர் பார்த்திருக்கிறேன்
முட்புதர் அதுவென்று பிறகுதான் தெரிகிறது...

வாழக்கையையே
வழுக்கு மரம் ஆக்கிவிட்டவனே...

வலியைக் கொடுத்தாலும்
வழுக்குப் பாதையிலும்
வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்...

வளம் சேர்கிறது...
நலம் கூடுகிறது...
சிகரம் தொட்டதாய் சிலநேரம்
சிந்தை மகிழ்கிறது...
சிறிது நேரத்தில்
சிலந்தி வலை பின்னுகிறது...

வலையில் விழாமல் இருக்க
வழுக்குப் பாறையில் விழுகிறேன்...
வலி...  மீண்டும் வலி...

ஆனாலும்
அசராத மனம் கொடுத்தாய்...
எட்டாவது முறையாக
ஏன் விழுந்தேன் என்று வருத்தப்படாமல்
ஒன்பது முறை
உன்னால்தான் எழுந்திருக்க முடிந்திருக்கிறது...
இன்னொரு  முறை முடியாதா என
உள்ளத் தெம்பு கொடுத்தாய்..

பார்த்துப் பார்த்தே
பாடம் படித்துவிட  நினைக்கிறேன்..
நீயோ...
புடம் போட்டு புடம் போட்டே
புரிய வைக்கிறாய்...

சுயகொள்முதல்தான்
சுத்த நிர்குணம் என்கிறாய்...
வாழ்க்கையின்
வழி நெடுக தொடர்கிறது...
வலி...வாட்டம் தரும் வலி...




















இனிப்பை மட்டுமே
இடைவிடாது கொடுத்துவிட்டு
இறுதியில் காரத்தைக் கொடுத்தால்
காரம் தாங்காமல்
கண்கள் சுரந்துவிடும்.

விழிகள் சிவக்குமளவுக்கு...
வியர்த்துக்கொட்டுமளவுக்கு...
மிளகாயை மட்டுமே
மீண்டும் மீண்டும் கொடுத்தாய்...
இறுதியில்
இனிப்பை கொடுத்தாய்....அதனால்
இதயத்தின் ஆழம் வரை இனிக்கிறது.
இனிப்பின் இன்பம்
இரு மடங்கு சுவைக்கிறது...

இறைவா...!
இனிமேலும் என்னை
உன்னோடு சண்டை போட விடாதே...

இன்பம் நீ...
துன்பம்  நீ...
வாழ்வும் நீ...
வலியும் நீ....
எல்லாமும் நீ என்ற பிறகு...
நான் மட்டும் யார்?





Sunday 11 September 2011

erakumar

.கொடுங்கள்; பெறுகின்ற தகுதியை நீங்கள் பெறுவதற்காக கொடுங்கள்